செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கையொன்றினை வெளியிடுவார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனது உயர்கல்வி தகைமை தொடர்பில் சபாநாயகர் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார். அவரால் வெளியிடப்படும் அறிக்கைக்கு அமையவே அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும். வெளியான செய்திகள் உண்மையானாலும் போலியானவை என்றாலும் அவற்றுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பெறுபேறுகளின் அடிப்படையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், கூற்றுக்கள் உண்மையாகவும் பொய்யானதாகவும் இருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகைமைகள் குறித்து பாராளுமன்ற இணையத்தளத்தில் ஆரம்பத்தில் ‘கலாநிதி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் முகநூலில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ரன்வல தனது கல்வித் தகையை நிரூபிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நிரூபிக்க தவறினால் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பாராளுமன்ற இணையதளத்தில் ‘கலாநிதி’ என்ற சொல் சபாநாயகரின் பெயருக்கு அருகிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது