கடந்த ஜனவரி 17 மற்றும் 18ஆம் திகதிகளில் பெருமளவிலான சிவப்பு மற்றும் மஞ்சள் நிற லேபல்களுடனான கொள்கலன்கள் பல, எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதாக பலராலும் கூறப்படுவதே இங்கு பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சர்ச்சைசக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவையாகும்.அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன. , யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பெரிய குண்டை வெடிக்கச் செய்திருந்தார்.
இங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய, பச்சை, நீல நிற லேபள் ஒட்டப்பட்ட கொள்கலன்களை பரிசோதனைகள் இன்றி விடுவிக்க முடியும்.ஆனால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று கொள்கலன்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் மஞ்சள் நிற லேபள் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், தேவைப்பட்டால் கொள்கலன்களில் உள்ளே உள்ள பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சிவப்பு நிற லேபல்கள் கொண்ட கொள்கலன்கள் கட்டாயம் சகல பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும். எந்தவொரு பரிசோதனையும் இன்றி கொள்கலன்களை விடுவிக்க முடியாது என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கத்திலிருந்து பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு நிற லேபலுடான 323 கொள்கலன்கள், தற்போது இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேசத்திலும் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இங்கு அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் ‘சிவப்பு நிற லேபல்” என்பதுதான்.சாதாரணமாக பச்சை, நீல நிற லேபல்கள் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் கூட, இந்தளவுக்கு இவ்விடயம் பூதாரகரமாகியிருக்காது.
ஆனால், ‘சிவப்பு நிற லேபள்” ஒட்டப்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைதான் இங்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறைமுக அமைச்சருக்கோ, சுங்கத்திற்கு பொறுப்பான நிதி அமைச்சருக்கோ ‘சிவப்பு நிற லேபலுடான’ கொள்கலன்களை விடுவிப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்கவும் சுங்க கட்டணம் அதிகரிக்க மற்றும் குறைக்க மாத்திரமே அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.
இந்த கொள்கலன்கள், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்திவிடுவித்திருந்தாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த பிரச்சினையை வெளிகொண்டு வந்த முக்கிய நபர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில .இந்நிலையில் சிவப்புநிற லேபல்கள் கொண்ட கொள்கலன்களை ஏன் சோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டன.
இங்கே சுங்க சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆயுதங்கள் இருந்திருக்கலாம் என்று கூறுபவர்கள் நாங்கள் அல்ல. சுங்க அதிகாரிகளே கூறுகின்றனர்.இதேவேளை சுங்கத்தினால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான பட்டியல் என்னிடம் உள்ளது.
அது எங்கிருந்து வந்தது. யாருக்கு அனுப்பப்பட்டது. அதற்குள் என்ன இருந்தது. அந்த கொள்கலன்களின் இலக்கங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் நான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்.
இவ்வாறாக விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கைகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. மேலதிக சுங்க செயலாளர் 270 கொள்கலன்கள் என்கிறார். சுங்க அதிகாரிகள் சங்கத்தினரோ 323 கொள்கலன்கள் என்கின்றனர். ஆனால் என்னிடம் உள்ள பட்டியலில் 371 கொள்கலன்கள் உள்ளன.
அவற்றை நான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளேன். இந்த கொள்கலன்கள் தொடர்பான பட்டியலை எனது இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.
தகவல்கள் அறியும் சட்டத்திற்கமைய இந்த கொள்கலன்களுடன் தொடர்புடையவர்கள் இதற்கு முன்னரும் சுங்க தவறுகளை செய்தவர்களா? என்று கேட்டேன்.
ஆனால் தங்களிடம் அந்த தகவல்கள் இல்லையென சுங்க திணைக்களம் கூறுகின்றது. அப்படியென்றால் அந்த தகவல்கள் காணாமல் போயுள்ளதா? அதற்கான காரணம் என்ன? இந்த கொள்கலன்களை விடுவித்த குழுவின் தலைவராக இருந்தவரே மேலதிக சுங்கபணிப்பாளரே சீவலி அருக்கொட ஆவார்.
இவர் நவம்பர் மாதத்தில் ஓய்வு பெறவுள்ளதுடன், பின்னர் பெல்ஜியத்திற்கு தொழிலுக்காக செல்லவும் உள்ளார். இவர் வெளிநாட்டுக்கு சென்றால் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரன் வெளிநாடு சென்றதால் அந்த விசாரணைகள் தடைப்பட்டதை போன்று ஆகிவிடும் என்பதனால் சீவலி அருக்கொடவுக்கு வெளிநாட்டு பயணத் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளேன்.
இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்திருக்கலாம் என்று சுங்க அதிகாரிகளினாலேயே சந்தேகம் வெளியிடப்பட்டது. இந்நிலையில்கடந்த ஜனவரி 17 மற்றும் 18ஆம்திகதிகளிலேயே இந்த கொள்கலன்கள் வெளியில் வந்துள்ளன.
அதன்பின்னரான காலத்தில் கடந்த வருடங்களை விடவும் அதிகளவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த வருடத்தில் மொத்தமாக 105 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளதுடன், இந்தவருடத்தில் மே மாதம் வரையில்50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அப்படியாயின் சுங்க அதிகாரிகளின் சந்தேகங்களில் நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். இந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பதை வெளிப்படுத்த அரசாங்கம் ஏன் இன்றும் பின்வாங்குகிறது. இதனைவிடுத்து என்னை அச்சுறுத்தி சிறைக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர் என உதய கம்பலன்பில கூறியுள்ளார்.
இதேநேரம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாது விடுவிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் உதய கம்மன்பில, மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க இந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் குறித்து யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பெரிய குண்டை வெடிக்கச் செய்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சர்ச்சைசக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவையாகும்.அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன.
2009க்கு முன்னர் பிரபாகரன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்தன. அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.குமரன் பத்மநாதன் ஊடாக, இப்போது இவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே கொண்டு வந்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் என்னுடன் கதைத்தனர். அங்கே எஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில் போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர்.
இதனை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின் ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கும் சென்று இறுதியில் இங்கே கொண்டு வந்துள்ளனர் என பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இந்நிலையில் மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு நிற லேபல் பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல்வீரவன்ச மற்றுமொரு தகவலை வெளியிட்டு இருந்தார்.
கொள்கலன்களை பரிசோதனை செய்யாமல் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது. 323 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான விபரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மக்கள் வெகுவிரைவில் அறிந்துக் கொள்வார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிவப்பு நிற லேபல் கொண்ட கொள்கலன்களை அனுமதித்ததில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் மறுத்துள்ளார்.
அந்த கொள்கலன்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளால் தான் வருத்தமடைந்ததாகவும் ஆளுநர் கூறினார்.
இதேநேரம் இந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக சுங்கத் தொழிற்சங்க ஒன்றியமே முதலில் குற்றம் சுமத்தியிருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
சுங்கப் பணியாளர்கள் சங்கம் மற்றும் சிரேஷ்ட சுங்க அதிகாரிகள் உட்பட சுங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தரப்பினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். முறையான பரிசோதனை நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாது அதிக ஆபத்துள்ள கொள்கலன்கள் சில நாட்களுக்குள் அவசரமாக விடுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கலன்களை விடுவிப்பதால் நாட்டிற்குக் சேர வேண்டிய வருவாய் இழப்பு, தடைசெய்யப்பட்ட பொருட்களை விடுவித்தமை என பிரச்சினையொன்று தானாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இந்நிலையில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சிவப்பு நிற லேபல்கள் ஒட்டப்பட்ட கொள்கலன்களை விடுவித்ததாக குறிப்பிடுவது எவ்வித ஆதாரமும் அற்றது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் தெரிவித்தார்.
323 கொள்கலன்கள் விடுவிப்பு தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிப்பதற்கு எமது அரசாங்கத்தில் எவரும் சுங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் என்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் உண்மை வெளிவரும் துறைமுகங்கள் மற்றும் சுங்கத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தமையை பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா முற்றாக மறுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் முற்றிலும் ஆதாரமற்றதும் பொய்யானதுமாகும். அத்தகைய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை இவ்வாறு அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது என்று பாதுகாப்பு செயலாளர் எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்படுவதாக உதய கம்பன்பில, கூறும் சிவப்பு நிற லேபல்களை கொண்ட கொள்கலன்களை விடுவித்த குழுவின் தலைவராக இருந்த மேலதிக சுங்க பணிப்பாளர் சீவலி அருக்கொட தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியி ருந்தார்.
“ சுங்கத்தில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது. கொள்கலன்கள் தேங்கிக் கிடந்தன. பொருட்கள் விடுவிக்கப்படும் அளவும் குறைவாகவே இருந்தது. இதனால் இறக்குமதியாளர்கள், சாரதிகள் என பல தரப்பினரிடமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. விடுவிக்கப்படும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
சுங்கத்தில் 7 நாட்கள் வரை பொருட்கள் இவ்வாறு தேங்கி இருந்தால் அதன்மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பாரிய பொருளாதார இழப்பும் ஏற்படும்.
மூலப்பொருட்கள் உள்ளிட்ட விடயங்கள் உரிய நேரத்துக்கு கிடைக்காமல்போகும். இதன்மூலம் ஓடர்கள் இரத்து செய்யப்படும் நிலையும் ஏற்பட்டது.
துறைமுகத்தில் நெருக்கடி நிலை இருந்ததால் சில கப்பல்கள் திரும்பிச்சென்றன. இதனால் நாட்டுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சுங்கத் திணைக்களத்தால் மேலதிக சுங்க பணிப்பாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.
அது அனுபவம் மிக்க குழுவாகும். அக்குழுவின் நிர்ணயங்களுக்கு அமைய, அச்சுறுத்தல் இல்லை எனக் கருதப்படும் கொள்கலன்களை பரிசோதனை இன்றி விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருட்களே அந்த கொள்கலன்களில் இருந்தன. பிளாஸ்டிக், துணி வகைகள், நூல் வகைகள், இரசாயனம், இலத்திரனியல் உபகரணங்கள், விலங்கு உணவு, வாகன உதிரிபாகங்கள், சீமெந்து உள்ளிட்டவையே இருந்துள்ளன. இந்தியா மற்றும் சீனாவில் இருந்தே பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவை தொடர்பான ஆவணங்கள் முறையாக முழுமையாக சோதிக்கப்பட்டே பொருட்கள் விடுவிக்கப்பட்டன.
எனினும், அவற்றில் ஆயுதங்கள், தங்கம், போதைப்பொருட்கள் இருந்திருக்கக்கூடும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு ஆயுதம், தங்கம், போதைப்பொருள் என்பன இருக்கவில்லை.
சட்டவிரோத பொருட்கள் வந்திருந்தால் உளவுத் தகவல்கள் கிடைத்திருக்கும். திடீர் பரிசோதனையும் இடம்பெறுகின்றது. எனவே, அச்சுறுத்தல் இல்லையெனக் கருதப்பட்ட பொருட்களே விடுவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் எமக்கு சந்தேகம் இல்லை. விசாரணையில் இது உறுதியாகும் என சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட குறிப்பிட்டார்.
இதேநேரம் “கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் போலியான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சிஐடியினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இதற்கிடையில் கொள்கலன்களை விடுவிக்குமாறு அழுத்த கொடுத்ததாக கூறப்படும் அமைச்சர் பிமல் ரட்நாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள், வெடிபொருட்கள், தரம் குறைந்த மருந்துகள்,ஆபத்தான பொருட்கள் இருந்திருக்கலாம் என்பதே பகிரங்கமான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை வெறுமனே கடந்துசெல்ல முடியாது. இவ்விடயம் தொடர்பாக அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள நிலையிலும் இதுதொடர்பில் ஆளமான விசாரணைகளை முன்னெடுத்து அதன் உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இதேநேரம் இவ்விடயம் தொடர்பில் நிதி அமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவொன்றும் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. அந்த குழுவுக்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. சிஐடியினருக்கும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனவே ‘சிவப்பு நிற லேபல்” ஒட்டப்பட்ட இந்த கொள்கலன்களில் உண்மையில் என்ன இருந்தது என்பது இன்னமும் புதிராகவே உள்ளது.
‘சிவப்பு நிற லேபலால்” சிக்கலில் சிக்கியுள்ள ஜனாதிபதி அநுர குமார அரசாங்கம் இதுதொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுத்து நாட்டு மக்களை தெளிவுப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.