முள்ளியவளையில்கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு இந்த பதாதைகள் இனந்தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது.அந்த தோரணத்தை அமைத்தமைக்கான காரணத்தை குறித்த நபர் ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை தெரிவித் திருந்தார்
வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் சிங்கள மொழி கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நான் நடாத்தி வருகிறேன். பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன்.
பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன். அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தேன்.
நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்த மத கலாசாரம் இங்கே வரவேண்டும் என்பதற்காகவோ இதைச் செய்யவில்லை. இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து காண்பித்து, விளக்கமளிக்கவே இதைச் செய்தேன். கற்பிக்கும் விடயத்தை பார்க்கக்கூடியவாறு காட்சிப்படுத்தினால்தான் மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.
மகிந்த தேரரின் வருகையும் இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபித்தலும் என்றால் என்ன என்பதும் தேவநம்பிய தீசன் காலத்தில் மகிந்த தேரர், பிக்குணி சங்கமித்தை வருகைதந்து எவ்வாறு பௌத்த மதத்தை ஸ்தாபித்தனர் என்பது தொடர்பான படங்களுமே பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன என விளக்கமளித்தார்.