யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த இவர்.. இந்திய இராணுவத் தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதற்காக ஹரியானாவின் ஹிசாரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா நேற்று முதல்நாள் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே மாறும் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது உளவு பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த உளவாளி உறுதியான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கினால் அவர் உளவு அசெட்டாக மாறுவார். அதாவது உளவு பார்க்கும் நாட்டின் சொத்து. அவருக்கான செலவுகள், தேவைகளை அந்த நாடு பார்த்துக்கொள்ளும். அதோடு அந்த உளவாளி கண்டுபிடிக்கப்படும் நிலை இருந்தால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு நாட்டிற்கு நாடு கடத்தும். சொந்த நாட்டிற்கே கூட அந்த உளவாளியை அழைத்துக்கொள்ளும்.
இப்படி இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உளவு பார்த்த பாகிஸ்தான் குடிமகன்கள்.. இப்போது இந்தியா கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளனர். அப்படித்தான் பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே ஜோதி மாறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் உளவாளிகளுடன் இவர் தீவிர நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜோதியிடம் நேரடியாக உறுதியான பாதுகாப்பு துறை தகவல்கள் எதுவும் இல்லை. அவரால் அந்த உளவு தகவல்களை சேகரிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. என்ன நடந்தது?
‘டிராவல் வித் ஜோ மற்றும் ‘nomadic Leo girl wanderer’ என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்தி வந்த 33 வயதான அந்த பெண் பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை அனுப்பி உள்ளார். பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள எஹ்சான்-உர்-ரஹீம் என்ற அதிகாரியுடன் பல உளவுத்தகவல்களை இவர் பகிர்ந்து உள்ளார். முக்கியமாக ஜோதி ராணி இரண்டு முறை பாகிஸ்தானுக்கு நேரடியாக விசிட் சென்றதாக கூறப்படுகிறது. பயண வீடியோ போடுகிறேன் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டு அங்கே பாகிஸ்தான் அரசு அதிகாரிகளை சந்தித்து உள்ளார்.
சமீபத்தில்தான் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட்டார். தூதரக நடவடிக்கை அல்லாத வேறு செயல்களில் அந்த அதிகாரி ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அந்த அதிகாரி யார், அவர் வகித்து வந்த பொறுப்பு உள்ளிட்ட விவரங்கள் அப்போது வெளியாகவில்லை. இந்தியாவின் உத்தரவில் அந்த பாகிஸ்தான் அதிகாரி இந்தியாவால் Persona Non Grata என அறிவிக்கப்பட்டு, 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் நாடு கடத்தப்பட்ட அந்த பாகிஸ்தான் அதிகாரி பாகிஸ்தான் உயர் கமிஷனில் வேலை பார்த்த எஹ்சான்-உர்-ரஹீம் என்று தெரிய வந்துள்ளது. இவர்தான் தூதரக அதிகாரி என்ற பெயரில்.. இந்தியாவிற்குள் உளவு பார்த்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால்தான் ஜோதி மல்ஹோத்ரா எனப்படும் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த அதிகாரி வழியாக.. பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை இவர் வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது
முக்கியமாக மக்கள் அதிகம் கூடும்.. சுற்றுலா தலங்கள், பாதுகாப்பு தளவாடகங்கள் இருக்கும் இடங்கள், கட்சி கூட்டங்கள் பற்றிய தகவல்களை இவர் பகிர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் உயர் கமிஷனில் வேலை பார்த்த எஹ்சான்-உர்-ரஹீம் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை உளவு பார்த்து இருக்கிறார். ஜோதி வழியாக இந்த உளவு தகவல்களை அவர் பெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணையின் போது,ஜோதி மல்ஹோத்ரா போலீசாரிடம் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனுக்கு நாட்டிற்கு வருகை தர விசா பெறச் சென்றதாகவும், அப்போது ரஹீமை சந்தித்து அவருடன் பேசத் தொடங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், ரஹீம் வழியாக அலி அஹ்வான் என்ற பாகிஸ்தான் நபரை சந்தித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அங்கே பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்ததாகவும், பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பரை இந்துக்களின் பெயரில் தனது போனில் பதிவு செய்துவிட்டு, இந்திய ராணுவம் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டதாகவும், தொடர்ந்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும், இந்தியாவிற்கு எதிரான பல தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறி உள்ளார். பாகிஸ்தானுக்கு டிராவல் செய்வது போல பயணம் செய்து அங்கே உள்ளே பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து பல முக்கியமான விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது