நேற்று வெள்ளிக்கிழமை (13) கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் நீர்கொழும்பு நகர மண்டபத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கநீர்கொழும்பு மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றது.
காலி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் நான்காவது கட்டமாக இது அமைந்தது.தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் நீர்கொழும்பு களப்பு நெருக்கடி , ஹாமில்டன் கால்வாய்பிரச்சினை மோதா மீன் குஞ்சுகள் (Barramundi) பற்றாக்குறை போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் அதற்கு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
நீர்கொழும்பு களப்பைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் நிறுவனங்களால் கழிவுகள் மற்றும் அசுத்தமான பொருட்கள் கொட்டப்படுவதால் அதன் சுற்றுச்சூழல் அமைப்பு அழிந்து வருவதாகவும், களப்பு வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு பொருத்தமற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் கடற்றொழில் சமூகம் சுட்டிக்காட்டியது.
நீருக்கு அடியில் பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் ரப்பர் பலகைகள் படிந்திருப்பதால் ஒட்சிசன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ச்சிக்கு தடை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சகம் ஊடாக ரூபா 25 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி அதிகாரசபையை விரைவாக ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம். களப்பைத் துப்பரவு செய்ய தொடர்புடைய அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள், பொலிஸ், கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் சுற்றுலா சபை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு ஒன்றின் கீழ் செயற்பட வேண்டும்.
சட்டவிரோத கழிவு கொட்டுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத வலைகள் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
ஹாமில்டன் கால்வாயில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலிருந்து கழிவுகள் கொட்டப்படுவதால் அது கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், மண் படிந்து கால்வாயின் ஆழம் குறைந்து படகுப் போக்குவரத்து தடைபடுவதாகவும் கடற்றொழில் சமூகம் விளக்கமளித்தது.
இப் பிரச்சினை தொடர்பாக உடனடியாக ஒரு கள விஜயத்தை மேற்கொண்டு தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களுடனும் (நீர்ப்பாசனம், கடலோரப் பாதுகாப்பு போன்றவை) இணைந்து விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் விரைவான தீர்வுகள் வழங்கப்படும் என பிரதி அமைச்சர் பதிலளித்தார்.
மோதா மீன் வளர்ப்புக்கு கடந்த இரண்டு வருடங்களாக குஞ்சுகள் பற்றாக்குறை நிலவி வருவதாக கடற்றொழில் சமூகம் சுட்டிக்காட்டியது.
உள்நாட்டில் கிடைக்கும் குஞ்சுகளின் அதிக விலை நீரியல் வளர்ப்பாளர்களுக்கு சுமையாக இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் குஞ்சுகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரினர்.
மோதா மீன் குஞ்சுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும். இது தொடர்பாக அமைச்சகத்தின் தலையீட்டுடன் கடற்றொழில் திணைக்களம், நாரா (NAQDA) மற்றும் தனியார் துறையுடன் கலந்துரையாடி, குறுகியகால தீர்வாக குறைந்த விலையில் குஞ்சுகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .
கடற்றொழில் உபகரணங்களின் விலை உயர்வு குறித்து நிதியமைச்சகத்துடன் கலந்துரையாட ஒரு துணைக் குழு நியமிக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து, கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பெர்னாண்டோ, நகர மேயர், மாநகர சபை உறுப்பினர்கள், அமைச்சகத்துடன் இணைந்த அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளும், அத்துடன் தொடர்புடைய மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், கடலோரப் பாதுகாப்புப் படை, கடற்றொழில் மக்கள், கடற்றொழில் சங்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்