நேற்று (11) ஜெர்மனியக்கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura kumara Dissanayake), முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெற்றது.
பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு ஜெர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டுள்ளார்.
வரவேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்டெய்ன்மையருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிற்பகல் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) சுகீஷ்வர குணரத்ன மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.