2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் முறைகேடு இருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் அளித்த முறைப்பாட்டிற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரத்தியேக விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும்.
இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதற்கமைய ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக , “ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக” என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலகம்
கடந்த ஆறாம் திகதி (06.06.2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடளித்துள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட அத்துல திலக்கரத்ன என்ற நபர் தற்போது அந்த பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருவதுடன் அடுத்த வழக்கு விசாரணையின்போது நிதிமன்றம் மற்றும் முழு நாடும் ஆச்சரியமடையும் விடயங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பொறுப்புடன் தெரிவித்துக்கொள்வதாக மேலதிக சொலிசிட்ட ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி வேறு சிறைக்கைதிகளை விடுதலை செய்துள்ளமை தொடர்பான வழக்கு விசாரணைை நேற்று புதன்கிழமை (11) மீண்டும் இடம்பெற்றபோது, குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்துக்கு பதிலாக முறைப்பாட்டை முன்லைப்படுத்தி தெரிவிக்கையிலேயே மேலதிக சொலிசிட்ட ஜெனரால் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், சர்ச்சைக்குறிய சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நபர் தப்பிச்சென்றுள்ளதால், இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்டுவரும் விசாரணை முடிவடையவில்லை. அத்துடன் இந்த சம்பவம் வெறுமனே திடீரென இடம்பெற்ற சம்பவம் ஒன்று அல்ல. பல வருடங்களாக கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடி செயலாகும். அதனால் இதுதொடர்பான விசாரணைகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியாது.
இலங்கையில் இதுபோன்ற குற்றவாளிகள் மிகவும் நுட்பமானவர்கள் என்றும், உயர் பதவிகளில் உள்ள நபர்கள் வேறு எவரையும் விட நுட்பமானவர்கள் என்பதால் விசாரணை நடவடிக்கைகளுக்காக மேலும் இரண்டு வாரங்கள் தேவையாகும். அதேநேரம் அடுத்த வழங்கு விசாரணை தவணையின்போது இந்த விசாரணை தொடர்பில் நீதிமன்றம் அதிர்ச்சிக்குள்ளாகும் பல தகவல்களை வெளிப்படுத்துவேன் என்பதை மிகவும் பாெறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸ, சந்தேக நபரான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்காக மீண்டும் பிணை கோரியபோது அதனை நிராகரித்த பிரதான நீதிவான, எதிர்வரும் 25ஆம் திகதிவரை தொடர்ந்தும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை சிறைப்படுத்துமாறு உத்தரவிடடார். வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிவான் நலக்க சன்ஜீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றுவந்த கைதியொருவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் முறைகேடாக விடுதலை செய்த குற்றச்சாட்டில் மொஹான் கருணாரத்ன கடந்த 8ஆம் திகதி குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்றையதினம் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோதே நீதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.