சுப்பர்புளூ மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும் என்பதால் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஒரு வருடத்தில் 12 பௌர்ணமி தினங்கள். மாதத்துக்கு ஒரு தடவை பௌர்ணமி தோன்றும். அதாவது,சந்திரன் ஒரு தடவை பூமியை சுற்றி வருவதற்கு 29.5 நாட்கள் செல்லும். இதன்படி, 12 தடவைகள் பௌர்ணமி (முழு நிலவு) ஏற்படுவதற்கு 354 நாட்கள் ஆகும்.
நாம் பயன்படுத்தும் நாட்காட்டியில் 365 தினங்கள் உள்ளன. எனவே ஒரு வருடத்தில் 12 பௌர்ணமிகளுக்கு உரிய காலத்தைவிட மேலும் சுமார் 11 நாட்கள் எஞ்சியிருக்கும். இதனால் ஏறத்தாழ 3 வருடங்களுக்கு ஒரு தடவை, ஒரே மாதத்தில் இரு பௌர்ணமிகள் ஏற்படலாம். இதுவே புளூ மூன் (நீல நிலவு) என அழைக்கப்படுகிறது.
நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாகத் தோன்றலாம். ஆனால், ப்ளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம். இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியக்கூடும்.
சூரியன் மறைந்த உடனேயே ப்ளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும். இந்த முறை ப்ளூ மூன் தோன்றும்போது, ப்ளூ மூன் ஓகஸ்ட் 30 இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்.ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அதாவது நாளைய தினம் சுப்பர் புளு மூன்(பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.