மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!.
_ வ. கௌதமன்

2009 மே 18 ந்தேதி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, மனித குலத்தை நேசிக்கும் மனிதர்களாலும் மறக்க முடியாத கருப்பு நாள்.
எங்கள் தாய்மொழி தமிழைப் பேசிய எங்களின் தமிழீழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி உலகத்தால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், ரசாயன குண்டுகளையும் வீசி பெண்கள், பிஞ்சுக் குழந்தைகள் என்று கூட பார்க்காமல், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இனப்படுகொலை செய்து முடித்த அந்த நாளை, கண்ணீரும் செந்நீருமாக உலகத் தமிழினம் உள்வாங்கி, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அன்றைய தேதியில் திரு. விஷால் அவர்கள் அடங்கிய நட்சத்திர இசைத் திருவிழாவை, அதுவும் தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்க் கலைஞர்களை இணைத்துக் கொண்டு ஒரு கொண்டாட்ட நிகழ்வாக நடத்துவது என்பது நேர்மையற்றது மட்டுமல்ல, அறமற்ற செயலும் கூட என்பதனை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மரியாதைக்குரிய திரைப்படக் கலைஞர்களும்
உணர்வு பெருக்கோடு புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களைப் போன்றோரெல்லாம் கல்லூரி மாணவர்களோடு இணைந்து எண்ணற்ற போராட்டங்கள் செய்தும், வழக்குகள் சுமந்தும், ஐநா சபைக்கே பலமுறை சென்று போராடியும், வாதாடியும் யுத்தம் நடந்து 15 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னும் கூட அந்த திட்டமிட்ட இன அழிப்புக்கு நீதி கிடைக்காத நிலையில், இது போன்ற கொண்டாட்டங்களை அதே நாளில் நிகழ்த்தி, அதற்கான அறமான தாக்கங்களை சீர்குலைத்து விடக்கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
காவேரி பிரச்சனை என்றாலும், தமிழீழ உரிமை உள்ளிட்ட எத்தனையோ தமிழர் உரிமை மீட்புப் போராட்டங்களில் தமிழ்த் திரையுலகம் தங்களது மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறது என்பதனை உலகத் தமிழினம் ஒருபோதும் மறந்து விடாது.
ஆகையினால் மே 18 ந்தேதியினை தவிர்த்து, இதே நிகழ்வினை வேறொரு தேதியினில் நடத்தி தமிழின அழிப்பில் உயிர் ஈகம் செய்த தமிழர்களுக்கு தார்மீக மரியாதை செலுத்துமாறு, இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
வ. கௌதமன்
பொதுச்செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
09.05.2025