தமிழீழ ஈழவிடுதலையின் ஆயுதப் போராட்டத்தின் அறத்தினையும், அவசியத்தினையும் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய ஈழவிடுதலைப்போராளி திலீபனின் ஈகத்தினைக்கூட நினைவுகூரக்கூடாது என்று விடுதலை போர் மௌனிக்கப்பட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங்களக் காடையர்களை ஏவி இலங்கை அரசு திலீபன் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்துமாயின் தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றைக்கும் மாறாது என்பதற்கு இக்கொடும் நிகழ்வு மற்றுமொரு சான்றாகும்”
இவ்வாறு, தமிழக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இன்று(17) திருகோணமலை கப்பல்துறையில் தியாக தீபம் அவர்களை நினைக்கூரும்வகையில், தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது சிங்கள கட்டையர்களால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இனவாத அரசின் இராணுவ முகாம் எதிரில் சிங்கள காவல்துறையினர் முன்னிலையிலேயே தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், ஜனநாயக முறையில் தமிழர்கள் ஒருபோதும் உரிமையைப் பெற்றுவிட முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அற்ப அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் பெற்று வாழ்ந்திட முடியும் என்ற வரலாற்று பொய்யினை பன்னாட்டு அரங்கில் மீண்டும் மீண்டும் முன் வைக்கும் இந்திய ஒன்றிய அரசு இப்போதாவது இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா?
தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிகளின் மீதான வன்முறை தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன்?
இதுதான் இந்தியா தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத்தரும் முறையா?
தமிழ்நாட்டினை ஆளும் திமுக அரசு வழக்கம்போல் கடந்து செல்லாமல் உடனடியாக, ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://thodarum.com/wp-content/uploads/2023/09/img_0193.jpg)
![](https://thodarum.com/wp-content/uploads/2023/09/img_0194.jpg)