முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்..
நாளை மறுநாள் பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ள நிலையில், காவல்துறையினர் தரப்பில் அதற்க்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
2 இடங்களில் மட்டுமே பொதுமக்களை சந்திக்க விஜய்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய நேரத்திற்குள் மக்களை சந்தித்துவிட்டு கூட்டத்தை கலைக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, 5,100 ஏக்கம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனிடையே பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வரும் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை அழைத்து தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.இதனால் 900 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அதேபோல் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இருந்தாலும் பரந்தூர் மக்களை விஜய் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. இதனை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும் விமர்சனமாக முன் வைத்துவிட்டனர். இந்த நிலையில் பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
அதனை உறுதி செய்யும் வகையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டது. அதேபோல் பரந்தூர் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வருவதால் ஏற்படும் சிக்கல், பாதிப்புக்குள்ளாகும் நீர் நிலைகள் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. இதனை அறிக்கையாக தவெக தலைவர் விஜய்-யிடம் சமர்ப்பிக்க உள்ளதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் பரந்தூர் செல்வது உறுதியாகியுள்ளது. நடிகர் விஜய் பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்க காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர்.
இதன் மூலமாக அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக விஜய் மக்களை களத்தில் சந்திக்கவுள்ளார். இதனால் காவல்துறை தரப்பில் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பரந்தூரில் பொதுமக்களை சந்திப்பதற்காக வெறும் 2 இடங்களில் மட்டுமே காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த 2 இடங்களிலும் விஜய் மக்களை எங்கு சந்திக்கிறார் என்பதையும் இன்று மாலைக்குள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூற வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பரந்தூரில் மக்களை சந்திக்கும் போது அதிகளவில் கூட்டம் கூட்டக் கூடாது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் உடன் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சந்தித்துவிட்டு, சொன்ன நேரத்திற்குள் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்றும் விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.